அப்படி போடு, பிரதமருக்கு அனுமதி மறுப்பு : தேர்தல் ஆணையத்தின் அதிரடிகள்

0
27

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலையொட்டி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எமர்ஜென்ஸி நிலைமையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளது தேர்தல் ஆணையம். முறைகேடுகள் நடைபெறும் போது கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் எமர்ஜென்ஸி நிலைமையை தோற்றுவித்து இருப்பதாக, தி.மு.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

அவர் கூறுபகையில், “தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் பணி சவாலாக விளங்கி வருகிறது. தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதே எங்களுடைய முதன்மை பணியாகும். தேர்தலை அமைதியாகவும், வெளிப்படையாகவும், அனைவரும் பங்கேற்கும்படி நடத்த வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உண்டு.

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பெரிய அளவில் ஈடுபட்டு வருகிறோம். வரலாறு காணாத அளவில், 5 மாநிலங்களிலும் ரூ.53 கோடிக்கு அதிகமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.42 கோடியாகும்.

கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது…

தேர்தல் கமிஷனின் அரசியல் சட்டபூர்வ கடமையை நாங்கள் நிறைவேற்றுவதற்காக எங்களை குறை கூறுவதா? கட்டுக்கு அடங்காத வகையில் முறைகேடுகள் நடைபெறும்போது நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி நாங்கள் செயல்படவில்லை. அரசியல் சட்ட அதிகாரங்களுக்கு உட்பட்டு செயல்பட்டுவரும் தேர்தல் கமிஷனுக்கு எதிரான எந்த விமர்சனமும் முற்றிலும் நியாயமற்றது. அவற்றை நாங்கள் நிராகரிக்கிறோம்.

தேர்தல் ஆணையத்தின் முன் உள்ள சவால்கள்…

தேர்தலில் பண ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழ்நாடு சவால் நிறைந்த மாநிலமாக விளங்குகிறது. இருந்த போதிலும், எந்த முறைகேடுகளும் நடைபெறாத வகையில் எங்களால் இயன்ற அளவுக்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மறுப்பதால், ஏதாவது ஒரு அரசியல் கட்சி வருத்தம் அடைவது இயல்புதான். ஆனால், எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நியாயமான நடுவராக தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம்.

குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக அல்ல

எங்களுடைய நடவடிக்கைகள் யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்காகத்தான். பாதுகாப்பு சோதனைகள் தீவிரமாக இருக்கும் போது சிலருக்கு வசதிக்குறைவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படிதான் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ அல்லது தனி நபருக்கோ எதிரான நடவடிக்கை அல்ல, இது.

இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் மத்தியில் எங்களுக்கு உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல 5 மாநிலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே அரசியல் சட்டம் வழங்கியுள்ள புனிதமான பணியை எந்தவித தயக்கமும் குழப்பமும் இன்றி, அதனால் ஏற்படும் விளைவுகளை பொருட்படுத்தாமல் செய்து முடிப்போம்”, என்றார்.

பிரதமருக்கு அனுமதி மறுப்பு :

கேரள மாநிலம் கோட்டயத்தில் வரும் 9ம் தேதி பள்ளி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான பிரசார கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு வரும் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தலைவர்களின் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வரும் 9ம் தேதி கோவையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன்சிங் பிரசாரம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கேரளாவில் கோட்டயத்திலும் பிரதமர் மன்மோகன்சிங் பிரசாரம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் பிரதமர் பிரசாரக் கூட்டத்துக்காக கோட்டயத்தில் உள்ள எம்.டி.செமினரி பள்ளி மைதானத்தை காங்கிரசார் தேர்வு செய்திருந்தனர். இதற்கான அனுமதி கோரி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கப்பட்டது. நன்னடத்தை விதி அமலில் இருப்பதால் காங்கிரசாரின் கோரிக்கையை தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார்.

தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி பிரசாரக் கூட்டங்களை கல்வி நிலையங்களில் நடத்தக் கூடாது என்பதால் பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதமர் பிரசாரக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இந்த தகவலை டெல்லி தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.