எங்கேயும் காதல் – இனிக்காத சக்கர வள்ளி..!

0
49
எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரும் திரைப்படங்கள் அவ்வளவாக அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில்லை.ராவணன் போன்ற படங்கள் அளவிற்கு இந்த படத்திற்கு ஆவலுடன் காத்திருந்தோர் இல்லை என்றாலும் சன் பிக்சர்ஸ் அவர்கள் டிவியில் நல்ல சீன்களை மட்டும் பொறுக்கி ட்ரைலர் காட்டி அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டனர்.

சரி,படத்தில் என்ன தான் கதை, அது ஒண்ணும் இல்லீங்க.
அட  நிஜமாகவே ஒண்ணும் இல்லேங்க.

படத்தின் ஆரம்பத்திலேயே பிரபு தேவா வந்து என்னவோ ரொம்ப நல்ல திரைக்கதை எல்லாம் அமைத்து விட்டதைப் போல .’பாரீஸிற்கு வெகேசனில் வந்திருக்கும் பிஸினஸ்மேன் & ஜாலி பேர்வழி கமலுக்கும்(ஜெயம் ரவி) பாரீஸிலேயே வாழும் தமிழ்ப்பெண் கயல்விழிக்கும்(ஹன்சிகா) காதல், இது தான் கதை..இதைத் தான் பார்க்கப்போறீங்க’ ன்னு கதையை சொல்கிறார். நல்ல வேலை முதலிலேயே சொல்லி விட்டார், இல்லாவிட்டால் கடைசி வரை எப்போது கதை ஆரம்பிக்கும் எனத் தெரியாமலேயே படம் முடிந்து போயிருக்கும்.

பிரபுதேவாவுக்கு நன்றாக ஆட வரும் என்பதற்காக நம்ம எல்லோரையும் ‘ஆடு’ ஆக்கி படத்த ஓட்டி விடலாம் என்று பார்க்கிறாரோ?

அட அப்ப படத்தில எதுவுமே தேறலியா? தண்டமா என்று கேட்டால், நிச்சயம் ஆமாம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் பாரிஸின் கொள்ளை அழகை கொஞ்சமும் கஞ்சத்தனம் காட்டாமல் மொத்தமாய் அள்ளி வந்திருக்கிறார் கேமராமேன் நீரவ் ஷா, லாங் ஷாட் வந்தாலே அந்த பாரிஸ் நகரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்த தயாராகிறார் அவர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் படத்தில் நிஜ ஹீரோ அவர் தான். படத்தின் முக்கால்வாசி பிரேம்களை வால்பேப்பராக வைத்து கொள்ளலாம் அவ்வளவு அழகு.

ஹாரிஸ் எப்போ ஃபார்ம் ஆவீங்க :

ஹாரிஸ் ஜெயராஜிடம் நல்லதாய் நாலு பாட்டு கேட்டு ரொம்ப நாள் ஆனது மாதிரி இருக்கிறது, எல்லா பாடல்களும் கேட்கிற மாதிரி இருந்தாலும், நச் என்று மனதில் நிற்கும் படி எதுவும் இல்லை. ஆனாலும் அந்த வள்ளியே சக்கரை வள்ளியே பாடலின் காட்சி அமைப்பு நெஞ்சத்தை கொள்ளை கொள்கிறது. பிரபுதேவா நிற்கும் ஒரே இடம் அது தான் என்று எனக்கு தோன்றுகிறது. நம்ம ஊர் புடைவையில் ஹன்சிகாவை வெள்ளைக்காரர்கள் வழிவதைப் பார்க்க நன்றாகத் தான் இருக்கிறது. ஹன்சிகாவின் காஸ்ட்யூம் படம் முழுக்க சூப்பர், அதிலும் இந்த பாடலில் மிக அருமை. (காஸ்ட்யூம் : நளினி ஸ்ரீராம்)

கதை :

No Love,No Commitments,No Dissappointments

என்று டி-ஷர்ட் வாசகத்தை தன் கொள்கையாக வைத்திருக்கிறார் ஜெயம் ரவி. அவர் ஜாலியாக இருப்பதற்காக பாரிஸ் போகிறார்.

ஆண்டில் 11 மாதம் கஷ்டப்பட்டு பிசினஸ் பண்ணும் ஜெயம் ரவி ஒரு மாதம் ஓய்வுக்காக பாரிஸ் வருகிறாராம். ஆனால் அந்த 11 மாத கஷ்டத்தை 11 நொடிகளாவது காட்டி இருக்கலாமே?

அங்கு அழகான பல பெண்களுடன் டேட்டிங் போகிறார். அந்த பெண்களில்  ஒரு பெண்ணின் முன்னாள் காதலன் , டிடக்டிவ் ஆன ஹன்சிகாவின் அப்பாவிடம் சென்று இருவரையும் (அந்த பெண் & ஜெயம் ரவி) போட்டுத் தள்ள கட்டம் கட்டுகிறார். விஷயம் தெரிந்து, ஹன்சிகா இருவரையும் காப்பாற்ற வரும் போது ஜெயம் ரவியை பார்த்ததுமே காதல் வயப்படுகிறார். ஆனால் இப்படி ஊர் மேயும் ஆணைத் தான் பெண்களுக்கு பிடிக்குமா என்ன? ( பதில் பிரபுதேவாவுக்கு தான் வெளிச்சம் )

ஆனால் ரவி தன் கொள்கையை (பெரிய நாட்டை காப்பாற்றுகிற கொள்கை) விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார். சரி இடைவேளைக்கு பிறகாவது கதையில் எதாவது இருக்கும் என்றால் ஏமாற்றமே மிச்சம். இந்தியாவுக்கு திரும்பும் ஜெயம் ரவியை மீண்டும் 11 மாதங்கள் கழித்து பாரிஸுக்கு போவதாக காட்டி, கதையை விட்ட இடத்தில் இருந்து தொடங்குகிறார்கள்.

இந்த முறை ஹன்சிகா ரவியை காதலில் விழ வைக்க போடும் திட்டங்கள் வெற்றி பெறுகின்றன, வழக்கத்தை மீறாமல் க்ளைமாக்ஸ் அமைகிறது.

படத்தில் ராஜு சுந்தரம் பண்ணுவதெல்லாம் நகைச்சுவை என்று நான் எழுதினால்,தமிழ் சினிமாவிற்கு எழுத்தின் மூலம் துரோகம் செய்பவர்கள் பட்டியலில் என்னையும் தாராளமாக சேர்த்து விடலாம்.
அந்த அளவிற்கு அருவருப்பாக  உள்ளது அவரது காமெடி இல்லை ஒரே நெடி. (அவர் என்ன செய்வார், இயக்குனர் சொல்வதை செய்கிறார் கூடவே கொஞ்சம் வேண்டாத எக்ஸ்ப்ரசன் அவ்வளவுதான்)

முக்கிய அம்சங்கள் +-

வில்லன் இல்லை,சண்டை இல்லை,திருப்பங்கள் இல்லை,சுவாரசியம் இல்லை,நாலு நல்ல வசனம் இல்லை சரி விடுங்கள் இந்த மாதிரி படங்களும் வெற்றி பெறும். ஆனால் இந்த எல்லாவற்றோடு சேர்ந்து கதையும் இல்லாவிட்டால் எப்படி?

வெறும் கேமரா, ஹன்சிகா விற்காக எத்தனை நாள் படம் ஓடும்?

இதை எல்லாம் மீறி இந்த கோடையில் இரண்டு மணி நேரத்தில் பாரிஸுக்கு சுற்றுலா செல்ல விரும்பினால் படத்திற்கு போகலாம், நீரவ் ஷாவை நம்பி.

பிரகாஷ்ராஜ் கால்ஷீட் வீணடிக்கப்பட்டு இருக்கிறது,படத்தில் கதையே இல்லாமல் யார் இருந்து என்ன பயன்?

சந்தேகம் சார்..

கமல் என்று கதாநாயகன் பெயர் இருப்பதில் எதாவது உள்குத்து?

இது பிரபுதேவாவின் (நிஜக்)கதையா? பார்த்தால் அப்படி தெரியவில்லையே?
எந்த திருப்பமும் இல்லையே…

பதிவு பிடிச்சா பக்கத்துல ஒரு ஓட்டு போடுங்க..

  • குறிகள்
  • எங்கேயும் காதல்
பகிர்ந்து
முந்தைய செய்தி27/4 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : ஹன்சிகா மோத்வானி
அடுத்த செய்தி99 நாட் அவுட்.! (5)
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.

உங்கள் கருத்தை தெரிவிக்க