மும்பை இந்தியன்ஸ் வெற்றி தொடக்கம்..!

0
19

என்ன தான் நாமெல்லாம் தமிழ்நாட்டில் இருந்தாலும் அது என்னவோ தெரியல சென்னை அணி விளையாடும் போது இருப்பது போன்ற அதே உணர்வு சச்சின் அணி விளையாடும் போது இருப்பது தவிர்க்க முடியாதது. ஏனெனில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் என்றால் சச்சினை பிரித்து பார்க்க முடியாது.

டெல்லி அணிக்கு இடையே நடந்த இப்போட்டியில் மும்பை அணி எட்டு விக்கெட்டுகள் மீதம் இருக்கையில் வெற்றி பெற்றது. பல நல்ல வீரர்களை இழந்ததற்கு விலையை இப்போதே டெல்லி கொடுக்க தொடங்கி விட்டது என்றால் பொருத்தமாக இருக்கும். கிட்டத்தட்ட சேவாக் அடித்தால் வெற்றி இல்லையேல் அவ்வளவு தான் என்ற நிலைமையில் தான் டெல்லி அணி உள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சேவாக் முதலில் பேட்டிங் செய்ய விரும்பி களமிறங்கினார்.

 லசித் மலிங்கா தாண்டவம் :

முதல் ஓவர் வீசிய ஹர்பஜன் சேவாகிடம் ஒன்றும் பெரிதாக செய்ய முடியவில்லை.
சேவாக் அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். ஆனால் இரண்டாவது ஓவரிலேயே எல்லாம் மாறி போகும் என அப்போது அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. மலிங்கா தனது துல்லியமான யார்க்கர் பந்துகளால் இரண்டு முறை ஸ்டம்பை துளைத்தார். இதில் பலி ஆகி வெளியேறினார்கள் டேவிட் வார்னரும் உன்முக்த் சந்தும்.

இந்த ஐபிஎல்லின் முதல் மெய்டன் ஓவரை எதிர் கொண்டது சேவாக் என்றால் நிச்சயமாக கொஞ்சம் நம்பும் படி இல்லை தான். ஆனால் உலக கோப்பை இறுதி போட்டியில் சேவாக் அவுட் ஆன அதே மாதிரி பந்துகளால் தாக்கிய போதும் மலிங்காவிடம் பிடி கொடுக்காமல் விளையாடினார். இருந்தும் இந்த பொறுமை எல்லாம் ஒரு சின்ன தவறான் புரிந்துணர்வால் வீணாகி விட்டது. ஆரோன் பின்ச் சச்சினிடம் பந்தை அடித்து ரன்னுக்கு அழைக்க கொஞ்சம் தாமதித்து பின்னர்  ஓடிய சேவாக் ஒரு சின்ன பையனை போல நேர்த்தியாக ஸ்டம்பை நோக்கி சச்சினால் அடிக்கப்பட்டு வந்த நேரான த்ரோ வால் பரிதாபமாக அவுட் ஆனார்.

டெல்லி சார்பில் அதிக ரன்கள் குவித்த ஓஹ்ஜா (29) முர்டசா பந்தில் மலிந்கவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இர்பான் பதான் தான் சந்தித்த முதல் பந்திலியே ரன் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார்.பின்னர் மலிங்கா திரும்பினார், கூடவே அவரது யார்க்கரும் தொடர்ந்தது.

ஓரளவு தாக்கு பிடித்து விளையாடிய வேணுகோபால் ராவ் (26), மோர்னே மோர்கல் இருவரும் மலிங்கா பந்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினர்.
யாதவ்,திண்டா இருவரும் அனைவரையும் போல சீக்கிரமே அவுட் ஆகி வெளியேறினர்.

மலிங்கா ஐந்து விக்கெட்டுகளை சாய்த்தார். (5-13)

பொறுப்பாக விளையாடிய சச்சின் :

ஜெகப்ஸ் உடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரராக சச்சின் வந்ததும் டெல்லி மைதான முழுதும் சச்சின்..சச்சின் என்ற குரல்கள் ஒலித்தன.
மோர்கல் வீசிய இரண்டாவது ஓவரில் ஜேகப்ஸ் அவுட் ஆக, பின்னர் வந்த ராயுடுவும் சீக்கிரமே பெவிலியன் திரும்ப சச்சின் ரோஹித் ஷர்மா உடன் சேர்ந்து நிதானமாக விளையாடி ஆட்டத்தை மும்பை கை வசத்தில் இருந்து மாறாமல் பார்த்து கொண்டார். கடைசி வரை இந்த இணை பிரியாமல் விளையாடி மும்பை அணியை வெற்றி பெற வைத்தது.

சச்சின் (46) முதலில் தட்டி தட்டி விளையாடினாலும் பின் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். ரோஹித் ஷர்மா 27 ரன்கள் எடுத்தார்.

ஆட்ட நாயகன் : லசித் மலிங்கா

பகிர்ந்து
முந்தைய செய்திபெங்களூர் வெற்றியுடன் IPL 4 ஐ துவக்கியது..!
அடுத்த செய்திஅந்தர் பல்டி ராகுல் காந்தி..!
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.